கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!!

431

கனடா, ஸ்கார்புரோ பகுதியில் தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 27ஆம் திகதி இரவு, யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுதேசன் Pickle Barrelல் தனது வேலைகளை முடித்துவிட்டு ஜிம்மிற்கு செல்ல தயாரானதாக குடும்பத்தினர் முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர் ஆயுதம் ஒன்றுடன் southbound பகுதியில் தப்பி ஓடுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான சரியான காரணம் இன்னமும் பொலிஸாரினால் கண்டறியப்படவில்லை. ஆனால் தவறாக அடையாளம் காணப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கூற்றினையும் பொலிஸார் நிரூபிக்கவில்லை.

சந்தேக நபர் 5 அடி ஆண் எனவும், கறுப்பினத்தவராக இருக்கலாம் எனவும், பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். அத்துடன் வெள்ளை நிறத்துடனான ஜெக்கட் மற்றும் காக்கி நிறத்திலான காற்சட்டை ஒன்றையும் சந்தேக நபர் அணிந்திருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கும் என தாம் விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்காக வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கறுப்பு நிறத்திலான கார் ஒன்றே நிறுத்தப்பட்டிருந்ததாகவும், கொலை செய்யப்படுவதற்கு முன்னர் 40 நிமிடங்களாக அந்த கார் குறித்த பகுதியில் சுற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.