யுத்தக் குற்றம் குறித்து உண்மையான, வெளிப்படையான, சுதந்திர விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயம் குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பிரித்தானிய பாராளுமன்றில் நேற்று ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டமைக்கு பிரித்தானிய தொழில் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. நேற்று பிரித்தானிய பாராளுமன்றில் பிரதமர் டேவிட் கெமரூன் உரை நிகழ்த்துவதற்கு முன்பு இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
மாநாட்டை புறக்கணிக்க கனடா, இந்தியா முடிவு செய்த போதும் கெமரூன் அதனை செய்யவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து ஆராயவே அங்கு சென்றதாக டேவிட் கெமரூன் பதிலளித்துள்ளார்.
4000 மையல் தூரத்தில் இருந்து அதனை செய்ய முடியாது எனவும் 1948 இலங்கை சுதந்திரம் பெற்ற பின் வட பகுதிக்குச் சென்ற முதல் பிரித்தானிய பிரதமர் தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு நடத்தியதாக அவர் கூறியுள்ளார். தன்னால் முன்வைக்கப்பட்ட போர் குற்ற விசாரணை கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கையை நிராகரித்தால் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கப்படும் என டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.





