தமிழ்நாட்டின் திருப்பூரில் நிச்சயமான திருமணம் நின்ற நிலையில், திருமணம் மீண்டும் நடக்குமா என்ற பயத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த அருண்பாண்டி (25) என்பவர் திருப்பூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். அருண்பாண்டியும் அவர் உறவு பெண்ணான திவ்யாவும் காதலித்து வந்தனர்.
இருவரது வீட்டில், காதல் விடயம் தெரிந்த நிலையில் அவர்களின் குடும்பத்தார் திருமணம் தொடர்பாக ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார்கள்.
இந்த சூழ்நிலையில் எதிர்பாராதவிதமாக அருண்பாண்டியின் தந்தை சேதுபாண்டி திடீரென்று இறந்து விட்டார். இதனால் நேரம் சரியில்லை என்று இவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டு தை மாதம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அருண்பாண்டி திவ்யாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.
அவரும், அருண்பாண்டி வீட்டுக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் திவ்யாவை பெற்றோர் தேடிப்பார்த்தனர்.
பின்னர் அருண்பாண்டியன் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்த போது இருவரும் துாக்கில் சடலமாக தொங்கினார்கள்.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தை மாதம் நடக்கும் என கூறப்பட்ட திருமணம் மீண்டும் தள்ளிப்போகுமோ என்ற பயத்தில் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.