வவுனியாவில் ‘நாம் பயிரிட்டு நாம் உண்போம்’ திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெற்செய்கைக்கான மானியம் வழங்கல்!!

736

‘நாம் பயிரிட்டு நாம் உண்போம்’ என்னும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் உழுந்து மற்றும் பாராம்பரிய நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விவசாய அமைச்சரால் மானியம் வழங்கும் நிகழ்வும், இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும் நேற்று மாலை நடைபெற்றது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், மீள்குடியேற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைத்து நாட்டை விவசாயத்துறையில் தன்னிறைவு அடைச் செய்யும் முகமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் விவசாய அமைச்சினால் நாம் பயிரிட்டு நாம் உண்போம் என்னும் தொனிப்பொருளில் விவசாய, தானிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் பல்வேறு மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் உழுந்து செய்கையை ஊக்குவிக்கும் முகமாக 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து பயிற்செய்கை மேற்கொள்வதற்காக 50 வீதமான மானியங்களை விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு வழங்கி வைத்துள்ளது. அத்துடன் வட பிராந்தியத்தில் பாராம்பரிய நெல்லுற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 550 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான மானியங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், இதன் மூலம் நாட்டிற்கு தேவையான உழுந்து தேவையை பூர்த்தி செய்ய எதிர்பர்த்துள்ளதுடன் உழுந்து இறக்குமதியை கட்டுப்படுத்தவும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், பாராம்பரிய நெல் உற்பத்தியை தற்போதைய விலையை விட மும்மடக்கு விலையில் சந்தைப்படுத்துவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் பாராம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்படும் நெல்லினை தற்போதைய விலையை விட மும்மடங்கு விலையில் கொள்வனவு செய்ய அக்சயா என்ற நிறுவனத்துடன், விவசாய அமைச்சர் மற்றும் பிரதி விவசாய அமைச்சர் ஆகியோர் இன்று ஒப்பந்தமும் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எம்.ஐ.ஹனீபா மற்றும் அரச அதிகாரிகள், அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு தலைவர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.