வவுனியா தமிழ் மாமன்றம் வெளியிட்ட முதலாவது கவிதைத் தொகுப்பான “இருளைப் படைத்தல்” 23-11-2013 மாலை 4.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பெரும் எதிர் பார்ப்புக்களுக்கு மத்தியில் இந்த புத்தக வெளியீடு தமிழ் மாமன்றத்தின் முதல் குழந்தையாக பிரசவித்தது. இந்த கவிதைத் தொகுப்பு தமிழ் மாமன்ற உறுப்பினர்களான மதுரகன் மற்றும் திலீபன் ஆகியோரால் படைக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் வைத்தியர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். அகவணக்கத்துடனும், தமிழ் தெய்வ வணக்கப் பண் உடனும் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகியது. கவிஞர்கள் இருவரினதும் பெற்றோர்கள் மங்கள விளக்கின் சுடர்களை ஏற்றி சிறப்பித்தனர்.
தொடர்ந்து வரவேற்புரையினை இருளைப் படைத்தவர்களில் ஒருவருமான வைத்தியகலாநிதி பா.திலீபன் வழங்கி இருந்தார். இவ்விரு கவிஞர்களை பாடசாலைக் காலத்திலே தமிழ் மீது ஆர்வம் கொள்ள வைத்தவரான, கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஐயா முதன்மை உரையினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தலைமை உரையினை கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் வழங்கினார். “இருளைப் படைத்தல்” எனும் தலைப்பிற்கு ஒரு தெளிவான விளக்கத்தை , விளக்கமாகக் கொடுத்தார். தொடர்ந்து கௌரவ விருந்தினர் உரையினை, வைத்திய கலாநிதி சு.ரவிராஜ் மற்றும், வைத்திய கலாநிதி சி.சிவகணேஷ் என்போர் வழங்கினர்.
தமது மாணவர்களின் சிறப்புக்களை இவ்விருவரும் வழங்கி இருந்தனர். தொடர்ந்து, கௌரவ சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களும் கௌரவ உரையினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து வவுனியாவில் முதல் தடவையாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா அவர்களின் சிறப்பு உரை இடம்பெற்றது.
சபையினை இயலபாகவே கவரும் தன்மை கொண்ட அவரது பேச்சினை சபையிலிருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் இரசித்துக் கொண்டே இருந்தனர். அவரது பேச்சு முடிந்த பின்னரும், மீண்டும் பேச மாட்டாரா? என்ற ஏக்கம் அனைவர் மத்தியிலும் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு நடைபெற்றது.
வாழ்த்துரையினை இலக்கியச் சுடர் ஐ.கதிர்காமசேகரன் உணர்ச்சி பொங்க வெளிப்படுத்தினார். இவரும் பாடசாலைக் காலங்களில் கவிஞர்கள் இருவரினையும் கவிதைகள் எழுத ஊக்குவித்தவர். நிகழ்ச்சிகளின் இடையிடையே தமிழ் மாமன்ற உறுப்பினர்களான துஸ்மன், சஜீந்திரா மற்றும் சார்ள்ஸ் ஆகியோரின் கவிதை நயத்தலும் இடம்பெற்றது.
இறுதியாக ஏற்புரையும், நன்றி பகிரலும் இருளைப் படைத்தவர்களில் ஒருவரான வைத்தியகலாநிதி செ.மதுரகன் வழங்கி சிறப்பித்தார். தங்களை வளர்த்தவர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.
-கிருத்திகன்-






