இந்திய அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 1-1 என மேற்கிந்திய தீவுகள் அணி சமன் செய்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விராத் கோலி 99 ஓட்டங்களைப் பெற்றதுடன் அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
ரவி ராம்போல் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், ஜேம்ஸ் ஹொல்டர், வீரசமி போமோல் மற்றும் டரன் சமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
289 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கை எட்டியது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டரன் சமி 45 பந்துகளில் 63 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், லெண்டில் சிமென்ஸ் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணிசார்பாக புவனேஸ்வர் குமார், மொஹமட் சமி அஹமட், மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
போட்டியின் சிறப்பாட்டகாரராக டெரன் சமி தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது





