யுவதி நஞ்சருந்தி மரணம் : இளைஞன் கைது!!

1223

அம்பாறையில் காதலனுக்கும் காதலிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலி நஞ்சருந்தி மரணித்தமை தொடர்பில் இளைஞரை நேற்று கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் மூதூர் கங்குவேலி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது 9ஆம் திகதி அம்பாறை பகுதியிலிருந்து மட்டக்களப்பு ஊடாக சேருநுவர பகுதிக்கு வருகை தந்திருந்த யுவதி தனது காதலனுக்கு தன்னை சந்திப்பதற்காக சேருநுவர பகுதிக்கு வருமாறு கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த இளைஞன் அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.

அதனையடுத்து இருவருக்குமிடையில் சிறு நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் பின்னர் இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த யுவதி அருகிலுள்ள மரத்தடிக்குச் சென்றதாகவும், சிறிது நேரமாகியும் மரத்தடியிலிருந்து காதலி வராததை அடுத்து அவ்விடத்துக்குச் சென்ற போது காதலியான ஆனந்தன் ரஜனி என்ற யுவதி நஞ்சருந்தி கொண்டிருப்பதை அவதானித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை உடனடியாக மோட்டார் சைக்கிளில் யுவதியை ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு சென்றதாகவும் இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரியவருகின்றது.

ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த யுவதியின் சடலம் தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த யுவதி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவருகின்றது.

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்துள்ளதுடன் மரண விசாரணைகளை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே.எம். நூருல்லாஹ் மேற்கொண்டார்.

இம்மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தைக் கொண்டு செல்லுமாறும், குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சேருநுவர பொலிஸாருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நூருல்லாஹ் கட்டளையிட்டுள்ளார்.