வவுனியா கிராம அலுவலகத்திற்குள் அரபுமொழி பெயர்ப்பலகை : மக்கள் விசனம்!!

1219

அரபுமொழி பெயர்ப்பலகை

வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் கிராம அலுவலகத்திற்குள் அரபு மொழியிலான பெயர்ப்பலகை ஒன்று அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள பொது மக்கள், பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் குறித்த பெயர்ப் பலகையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரிவருகின்றனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் கிராம அலுவலகத்தில் அண்மையில் கட்டார் நாட்டின் அனுசரணையில் தண்ணீர் தாங்கி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்நாட்டின் தேசிய மொழியான அரபு மொழியினைத் தாங்கிய பெயர்ப் பலகையினை கிராம அலுவலகத்திற்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள அமைப்புக்கள், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளதுடன் குறித்த அரபு மொழியாலான பெயர்ப்பலகையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரிவருகின்றனர்.

தமிழ் மக்கள் பெருமளவில் செறிந்து வாழும் குறித்த பிரதேசத்தில் இவ்வாறு வெளிநாட்டு நிறுவனத்தின் அரபுமொழி பெயர்ப்பலகையின் அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது எனவும் எமது மக்களுக்கு நிதி அனுசரணை என்ற பெயரில் அரபு மொழியினை இலங்கைக்குள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.