வவுனியா காணாமல் போனோரின் போராட்ட களத்திற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வருகை!!

600

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டக் களத்திற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் கடந்த 648 நாட்களாக தொடர்ந்து சுழற்சி முறையில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது, களத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் காணாமல்போனவர்களின் உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஜேர்மன் நாட்டு ஆண், பெண் இரு ஊடகவியலாளர்களே இன்றைய தினம் வவுனியா போராட்ட களத்திற்குச் சென்றுள்ளனர்.

கடந்த ஒருவருடத்திற்கு மேலாக தமது போராட்டங்களின் போது வெளிநாட்டுத் தலையீட்டை கோரி போராட்டம் மேற்கொண்டு வந்த உறவுகளைச் சந்தித்து அவர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டநாள் தொடக்கம் இன்றுவரையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் புகைப்படம் குரல் என்பன ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் மாற்றம் புதிய பிரதமர் வருகை என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொழும்பில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முதன்மை சந்தேக நபரான பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அது தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடம் கேள்வி எழுப்பிய வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் இக்கைது வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் நடவடிக்கையே என்று தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் கே. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.