வவுனியாவில் தடையை மீறி நடைபாதை வியாபார நிலையம் சீரமைப்புப்பணிகள் : நகரசபை மீது விசனம்!!

1099

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதையில் வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நகரசபை தலைவர் அதில் எவ்வித அக்கறை அற்ற நிலையிலும் கவனிப்பாரற்ற நிலையிலும் செயற்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை அகற்ற கோரிக்கைகள் பலவும் விடுக்கப்பட்டு வரும் நிலையில் நகரசபையின் செயற்பாடுகள் காரணமாக அது தடுத்து நிறுத்தப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சில வியாபார நிலையங்களில் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் சம்பவ இடத்திற்குச் சென்ற உப நகர பிதா சு.குமாரசாமி தற்காலிகமாக சீரமைப்புப்பணிகளை நிறுத்த வைக்குமாறும் நகரபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் சீரமைக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபாதையிலுள்ள வியாபார நிலையங்கள் அனைத்திற்கும் கூரைத்தகடுகள் அமைக்கப்பட்டு உயரமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் நகரசபையினர் எவ்விதமான நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. நடைபாதை வியாபார நிலையங்களுக்கு சார்பான நிலைப்பாட்டிலிருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து நகர உப பிதாவிடம் கேட்டபோது, அன்றைய தினம் அங்கு சென்று சீரமைப்புப்பணிகளை நிறுத்துமாறு தெரிவித்திருந்தோம். இன்று நகரசபை தலைவர் அலுவலகத்திற்குச் சமூகமளிக்கில்லை. இது குறித்து அவருடன் கலந்துரையாடிவிட்டு நாளைய தினத்தில் பதில் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நகரசபைத்தலைவர் பள்ளிவாசல் நடைபாதை வியாபார நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியுள்ளார். அவர்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்துள்ளமையினால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளமுடியவில்லை என்று கடந்த மாதம் இவ்விடயம் குறித்து கலந்துரையாடச் சென்ற இளைஞர்களிடம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.