
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்குத் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், தன்னை கட்சியில் இருந்து ஓரம் கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஸ்மன் பியதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்கு, என்னையும், களனி அமைப்பாளர் திலக் வாரகொடவையும் தவிர, ஏனையவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
என்னையும் வேரகொடவையும் இந்த மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என்று அமைப்பாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன கேட்டுக் கொண்டதாக அறிகின்றேன்.
கடந்த 30ஆம் திகதியே அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு விட்ட போதும், இதுவரை எனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை.
கட்சியில் இருந்து என்னை ஓரம் கட்டுவதற்கான முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது” என சந்திரிகா கூறியுள்ளார்.




