ஆளுமையுள்ள ஒழுக்கமிகு சமூகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் : நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன்!!

617

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தடகள மற்றும் பெரு விளையாட்டுகளுக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி முகாமின் ஆரம்ப நிகழ்வு இன்று (08.12.2018) பூந்தோட்டம் விவசாய பயிற்சிநிலைய கேட்போர்கூட மண்டபத்தில் இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதியாக கலந்து சிறப்பித்த வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவரும் வவுனியா நகரசபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் ஆளுமையுள்ள ஒழுக்கமிகு சமூகத்தை உருவாக்க இளைஞர்கள் சமூகத்தில் முன்வரவேண்டும் என்று தெரிவித்ததுடன் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று வதிவிட பயிற்சிக்கு வருகைதந்துள்ளவர்களில் தேசியமட்டத்தில் சாதனைபுரிந்த வீர வீராங்கனைகள் இங்கு இருப்பதையிட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன். எமது மாவட்டத்தின் பெயரினை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பதிக்கும் வலுவுள்ள இளைஞர் யுவதிகளை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய பாடசாலை காலம் தொட்டு இன்று வரையான முயற்சியாகவும், அதில் வெற்றிப்படிகளை சாதித்தவர்களாவும் சமூகத்தில் வலம் வருவதையிட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன்.

இப் பயிற்சி முகாமில் உங்களுக்குரிய துறைகளில் நீங்கள் திறனை வெளிப்படுத்தி போட்டிகளில் வெளிக்காட்ட வேண்டும். இங்கு தங்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு சிறந்த வளவாளர்களை ஒழுங்குபடுத்தியிருப்பதையிட்டு மனமகிழ்வாக உள்ளதுடன் அவர்களின் மூலம் நுட்பங்களை கையாளும் திறனை விருத்திசெய்ய வேண்டும் எனும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக உங்களிடம் உங்களில் ஒருவனாக எனது அவா ஆளுமையுள்ள ஒழுக்கமிகு சமூகத்தை நாம் விளையாட்டின் மூலம் ஏற்படுத்த வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளைய ஒழுக்கமிகு சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக நாம் சமூகத்தில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வின் சிறப்பு அதிதியாக வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுநிலை உப பீடாதிபதியும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உப தலைவருமான தெய்வேந்திரம், மாவட்ட விளையாட்டு அதிகாரி பர்சூட் கலந்து சிறப்பித்ததுடன்,

கௌரவ அதிதிகளாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் உடற்கல்வி விரிவுரையாளர் நவநீதன், குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் நிக்சன், தடகள பயிற்றுவிப்பாளர் நவநீதன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சுஹானி, இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்து ஆரம்ப நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.