மஹிந்தவுக்கு எதிராக களமிறங்கிய சுமந்திரன் : நாடாளுமன்றத்தில் சலசலப்பு!!

816

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டாம் என இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மனு ஒன்றை கையளித்துள்ளது.

தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் மனு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகிறார். இந்நிலையில் சுதந்திர கூட்டமைப்பினை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சமகால அரசாங்கத்தில் ஐந்து அமைச்சுக்களை ஜனாதிபதி வகித்து வருகின்றமையினால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அரசாங்கத்தில் இணைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராகவும், மஹிந்த அமரவீரவை பிரதான எதிர்க்கட்சியின் பிரதம கொஹடாவாகவும் அங்கீகரிப்பதாக சபாநாயகர் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளின் போது சட்ட ரீதியான அணுகுமுறைகளை சுமந்திரன் மேற்கொண்டு வருகிறார். சுமந்திரனின் செயற்பாடு குறித்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-