வவுனியா அலபொத்த குளத்தின் நீர் வெளியேற்றப்படுவதால் நெற்செய்கை பாதிப்பு : விவசாயிகள் விசனம்!!

833

வவுனியா அலபொத்த குளத்தின் நீர் வெளியேற்றப்படுவதால் தங்களது நெற்செய்கை பாதிக்கப்படுவதாக அலபொத்தகுளத்து நீரினை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது,

வவுனியா அலபொத்த குளத்தின் கீழ் மானாவரி நெற்செய்கையினை இருபத்து ஐந்து பங்காளர்களினால் முப்பது ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த முப்பது வருட காலமாக புனரமைக்கப்படாத இக்குளம் கடந்த மாதத்தில் புனரமைக்கப்பட்டிருந்து. இக்குளம் புனரமைக்கப்பட்ட பின்னர் இக்குளத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்தோடு இக்குளத்திற்கு பிரதான வாய்க்கால் மூலமாக வரும் நீரினால் இக்குளத்தின் நீரேந்து பகுதியில் அமையப்பெற்ற வீதி மற்றும் வீடுகள் நீரினால் சூழப்படுவதனை தடுக்கும் நோக்கில் இப்பிரதான வாய்க்காலினை இக்குளத்தினை நேரடியாக தொடர்புபடுத்தும் நோக்கில் பாலம் (வென்டஸ் கோஸ்) அமைக்கும் செய்ற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக இக்குளத்தின் குறிப்பிட்டளவு நீரினை மட்டும் வெளியேற்றும் செயற்பாட்டினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக கமக்கார அமைப்பினரால் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இன்று இச்செயற்பாட்டிற்கு இப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், சில விவசாயிகள் கமக்கார அமைப்பினருடன் வாய்தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நீரேந்து பகுதியில் காணப்படும் வீதியில் அமைக்கப்படும் பாலத்தின் (வென்டஸ் கோஸ்) காரணமாக ஆராய்வதற்காக அவ்விடம் வந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் ந.துரைராஜசிங்கம் இது தொடர்பாக ஆராய்ந்ததுடன் இது தொடர்பாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட விவசாயி கருத்து தெரிவிக்கையில், வீதி எமக்கு முக்கியமே அதற்காக அரசாங்கம் தந்த நிதியை வீனடித்து செல்ல விடமாட்டோம்.

மழைக் காலத்தில் இதனை செய்ய வந்துள்ளனர். இப்பாலத்தினை செய்வதற்காக நீரை திறந்து தாருங்கள் என்று சொன்னால் நீரை திறந்தும் வழங்க முடியாது, இதனை ஏற்கனவே இப்படித்தான் செய்யவுள்ளோம் என்று ஒரு முடிவினை எடுத்திருக்க வேண்டும்.

ஏன்எனில் கடனை வாங்கி, அடகு வைத்து வயல் விதைத்து விட்டு வயல் விளையவில்லை என்றால் என்ன செய்வது.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவிஆணையாளர் இ.விஜயகுமாரிடம் கேட்கப்பட்ட போது, வவுனியாவில் முப்பது வருடத்திற்கு பின்னர் கைவிடப்பட்ட அலபொத்த குளம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கீழ் விவசாயிகள் பயிர்ச்செய்கை செய்கின்றனர். இக்குளத்திற்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்காலில் பாலம் (வென்டஸ் கோஸ்) அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக சில விவசாயிகளுக்கு முரண்பாடுகள் காணப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த குளத்தில் இருந்து நீர் திறந்து விடப்படுவதாகவும் இதனால் தாங்கள் பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டிருந்தனர்.

உண்மையில் அந்த இக்குளத்திற்கான நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த வேலைத்திட்டம் முடியும் வரை குளத்தின் நீர் மட்டத்தை 1 அடி குறைத்து பேணப்படுவதாகவும், அதன் பின்னர் நீர்வரத்து மூலம் நீரினை குளத்தில் தேக்கி கொடுக்கப்படும் என தீர்மாணம் எடுக்கப்பட்டிருந்தது.

இத்தீர்மாணத்திற்கு எதிராக ஒரு பங்காளர் முரணாக இருந்திருந்தார். அந்த வகையில் அவருக்குரிய மேட்டுத்துரிசின் ஊடாக நீரினை பெற்றுக்கொடுத்த பின்னர் பள்ள துரிசின் ஊடாக நீரினை வழங்குவதன் மூலம் அவருக்குரிய வயலுக்குரிய நீர் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதையும் மீறி பாதிப்பு வரும் பட்சத்தில் அதற்குரிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் திணைக்களம் உறுதியளிக்கப்பட்டு இப்பிரச்சனைக்கான தீர்வினை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.