வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மதுபான சாலை : மூடுமாறு கோரி அரச அதிபருக்கு கடிதம்!!

740

 

அரச அதிபருக்கு கடிதம்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடி உதவ வேண்டுமென கோரி வவுனியா அரசாங்க அதிபருக்கு குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் கடிதமொன்றை கொடுத்துள்ளது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக மதுபானசாலையொன்று திறக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த பகுதி மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியாக காணப்படுவதுடன் கோவில்கள், வவுனியா பொது வைத்தியசாலை, மற்றும் அரசாங்கத்தின் பாரம்பரிய உணவகம் என்பன அமையப்பெற்ற இடத்தில் மக்களுக்கு இடையூறாக சில அரச அதிகாரிகளின் துணையுடன் மதுபான சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் மதுபானசாலை அமைக்கப்பட வேண்டுமாக இருந்தால் குறித்த பிரதேசத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுமதி பெறப்படவேண்டும்.

எனினும் அவ்வாறான அனுமதி பெறப்படாமல் அரச அதிகாரிகள் சிலரின் துணையுடன் மதுபான சாலை திறக்கப்பட்டமை மற்றும் குறித்த கிராமத்தில் மக்களின் வாழ்வியல் சூழலுக்கு குந்தகத்தினை ஏற்படுத்தும் செயற்பாட்டுக்கு குறித்த மதுபானசாலை பாதகமாக அமையும் என்பதனை கருத்தில் கொண்டு அரசாங்க அதிபர் சமூக அக்கறை கொண்டவர் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கான எதிர்பார்ப்புடையவர் என்பதனை முன்னிறுத்தி யாழ் வீதி மக்களினால் அரசாங்க அதிபரிடம் நேரடியாக கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.