கொழும்பில் நாய் கவ்விச் சென்ற மனித தலை யாருடையது?

496

நாய் கவ்விச் சென்ற மனித தலை

பேலியகொடை பகுதியில் நாய் ஒன்று கவ்விச் சென்ற போது மீட்கப்பட்டிருந்த மனித தலை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நாய் ஒன்று மனித தலையை கவ்விச் செல்வதாக பிரதேசவாசிகள் சிலர் காவல்துறைக்கு அறிவித்திருந்தனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை குழுவின் அவதானம், அண்மையில் வெளிநாட்டு ஜோடி ஒன்றின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நோக்கி திரும்பியுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி கொழும்பில் சொகுசு குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் தங்கியிருந்த வெளிநாட்டு ஜோடியின் சாரதி, அந்த வீட்டின் அறையினுள் மர்மமான முறையில் உயரிழந்திருந்தார்.

கதிரையொன்றில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்த அவரது சடலம் தொடர்பில் அந்த வெளிநாட்டு ஜோடி காவல்துறைக்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மொரட்டுவை பகுதியில் நபரொருவர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, அவரே இந்த வெளிநாட்டு ஜோடிக்கு சாரதியாக கடமையாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கமைய மீட்கப்பட்டுள்ள மனித தலை, குறித்த நபருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, அதனை உறுதி செய்வதற்காக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.