அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலையில் மாற்றம்!!

844

வானிலையில் மாற்றம்

அடுத்த இரண்டு நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதியில் (குறிப்பாக தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்) மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மேல், சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் கேகாலை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, களுத்துறை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.”