டிசம்பர் மாத ராசி பலன் – கன்னி!!

498

kanni

எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித் தான் வாழவேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளை உள்ளமும், வெளிப்படையாக பேசும் குணமும் கொண்டவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 5ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க அமர்ந்திருப்பதால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். வருங்காலம் குறித்த பயமும் விலகும். குழந்தைப் பாக்யம் உண்டாகும்.

உங்களுடைய ராசிநாதனான புதன் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆனால், உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும்.

உடல் உஷ்ணத்தால் கட்டி வரக்கூடும்.சிலருக்கு அடிவயிற்றில் வலி, கண் வலி, சின்னச் சின்ன நெருப்புக் காயங்களெல்லாம் வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.பாதச்சனி நடைபெறுவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாகும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். யாருக்காகவும் கரண்டர் கையொப்பமிட வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

2ல் ராகுவும், 8ல் கேதுவும் நிற்பதால் புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை இழந்து விடாதீர்கள். சூரியன் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைபட்ட கட்டுமானப்பணிகள் விரைந்து முடியும். வீடு கட்டுவதற்கு நேரம் கூடும்.

அரசியல்வாதிகளே புதிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கோஷ்டிப் பூசலிலிருந்து விடுபடுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாணவர்கள் டி.வி., சினிமாவையெல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும்.

கன்னிப் பெண்கள் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடாப்பழக்கமுள்ளவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

வியாபாரத்தில் கடையை விரிவு படுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் மூலமாக வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது பங்குதாரர்களும் வருவார்கள். உத்யோகத்தில் ஒரு ஸ்திரமற்ற போக்கு காணப்படும். மூத்த அதிகாரிகளின் மனநிலையை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பீர்கள். சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

10ல் குரு தொடர்வதால் சின்னச் சின்ன பழிகள் வரக்கூடும். உங்கள் கடின உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். கலைத்துறையினர் முடங்கிக் கிடந்த வேலைகள் உடனடியாக முடிவடையும். உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட் டப்படுவீர்கள். விவசாயிகள் மகசூல் பெருகும், பூச்சித் தொல்லை குறையும். ஊரிலே புதுப் பொறுப்புகள் வரும். சமயோஜித புத்தியாலும், கடந்த கால அனுபவங்களாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 18, 19, 20, 21, 28, 30, 31
ஜனவரி : 1, 5, 7, 8.

சந்திராஷ்டம தினங்கள் : ஜனவரி 9, 10 மற்றும் 11ம் திகதி காலை 9.30 மணிவரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம் : பெருமாளை சனிக்கிழமையன்று தரிசியுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்றளவு உதவுங்கள்.