அமெரிக்க விமானத்தால் குழப்பம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கிய அமெரிக்க விமானத்தினால் குழப்ப நிலை ஏற்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான C-2 ரக சரக்கு விமானம் ஒன்று இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை. பொதுவாக எந்தவொரு விமானமும், விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட பின்னர் அதன் பயணிகள் குறித்த பெயர் பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்காமல் விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனினும் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளிவிவகார அமைச்சின் ஊடாக C-2 ரக விமானத்தில் பயணித்தவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் விமான நிலைய சுங்கம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








