லண்டனில் அடுத்தடுத்து 4 பேருக்கு கத்திக்குத்து : மர்ம நபரின் வெறிச்செயல் : பொலிசார் விடுத்த எச்சரிக்கை!!

587

லண்டனில் அடுத்தடுத்து 4 பேருக்கு கத்திக்குத்து

லண்டனில் 12 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 4 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வடக்கு லண்டனில் 12 மணிநேரத்திற்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எட்மன்டன் பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு, பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் தற்போது 45 வயதான பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் தலையை மூடியவாறு கருப்பு நிறத்திலான உடை அணிந்து, உயரமான, ஒல்லியாக, கருப்பு மனிதனாக விவரிக்கப்பட்டுள்ளான். பின் பக்கத்திலிருந்தே பொதுமக்களை அணுகி தாக்குதல் நடத்தியுள்ளான். பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதாக இல்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்று இரவு 7 மணிக்கு (உள்ளுர் நேரப்படி), அபெர்டீன் சாலையில் முதலாவதாக 45 வயதான பெண் மீது தாக்குதல் நடந்துள்ளது. அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சில மணிநேரங்களுக்குப் பின்னர், பார்க் அவென்யூவில் நள்ளிரவு நேரத்தில் ஒரு மனிதன் தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை. அவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அதிகாலை 3.55 மணியளவில் (உள்ளுர் நேரப்படி) சில்வர் ஸ்ட்ரீட் பகுதியில் 23 வயது இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஒரு கால் மைல் தூரத்தில் பெண்ணின் பின்பக்கத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரின் நிலை மோசமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு இடையில் 22 வயதான மனிதன் லண்டனில் உள்ள வால்ட்ஸ்டோவில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

அவர் கிழக்கு லண்டன் ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது நிலைமை உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை எனவும் இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.