சுவரில் மோதிய பேருந்து

பேருந்து மோதி இடிந்து விழுந்த மதில் சுவரில் சிக்கி கண் பார்வையற்ற 11 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை நடந்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் சுதுவெல்ல பிரதேசத்தில் கடற்கரையில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற வைபவத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பார்வையற்றோர் கலந்துக்கொண்டுள்ளனர். வைபவம் முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்காக அவர்கள் மண்டபத்திற்கு எதிரில் இருந்துள்ளனர்.

அப்போது அவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் பேருந்து, திரும்பிச் செல்ல திருப்பப்பட்ட போது, பேருந்து பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்த மதில் சுவரில் மோதியுள்ளதுடன் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால், சுவருக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த பார்வையற்றோர் உடைந்து விழுந்த சுவரில் சிக்கி காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




