விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. வவுனியாவில் சேவைப் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் வழமை போல் பேரூந்து சேவைகள் ஈடுபடுமென வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் உள்ளிட்ட சில போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வகையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவரைவுக்கு எதிராக நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 24 மணிநேரம் இந்தச் சேவைப் புறக்கணிப்பு இடம்பெறும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் போக்குவரத்து சங்க தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

பணிப்புறக்கணிப்பு தொடர்பாக கொழும்பிலிருந்து எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை. வழமையாக பணிப்புறக்கணிப்பு என்றால் எமக்கு அறிவித்தல் வழங்கப்படும் ஆனால் நாளைய பணிப்புறக்கணிப்பு தொடர்பாக எவ்வித அறிவித்தலும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை . நாளையதினம் வவுனியா மாவட்டத்தில் அனைத்து தனியார் பேரூந்துகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுமெனவும் தெரிவித்தார்.




