வவுனியாவில் கடந்த இரு நாட்களில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் சோதனையில் 14 பேர் கைது!!

897

வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் பூவரசன்குளம், நெளுக்குளம் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 14 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், ஹயஸ் ரக வான் ஒன்றினையும் தடுத்து வைத்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சுற்றிவளைப்பு செய்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 11 பேரை கைது செய்ததுடன், சந்தேகத்தின் பேரில் ஹயஸ் ரக வான் ஓன்றினையும் கைப்பற்றி தடுத்து வைத்துள்ளனர்.

அத்துடன், அரபாநகர் பகுதியில் சுற்றித்திரிந்த முஸ்ஸிம் நபர் ஒருவரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை. அதன் பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது அவரது வீட்டிலிருந்து இராணுவ சீருடையை ஒத்த தொப்பி மற்றும் ஆடை என்பவற்றை கைப்பற்றியதுடன் குறித்த நபரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் மன்னார் பகுதியில் இருந்து பூவரசன்குளத்தில்
வந்து நின்ற ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பூவரசன்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இராசேந்திரங்குளம் பகுதியில் சந்தேகத்திடமான முறையில் திரிந்த நபரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரின் ஆள் அடையாள அட்டை பதிவு நீர்கொழும்பு என காணப்பட்டதுடன் பொலிஸாரின் விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தமையினால் நீர்கொழும்பு பகுதியினை சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.