உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களின் ஈஸ்ரர் புனித நாளிலே ஆறாத வடுவான தேவாலயங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கும் கொல்லப்பட்ட வெளிநாட்டவருக்கும் தீபமேந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா இறம்பைக்கும் அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (29.04.2019) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
தேவாலய வாயிலில் மெழுகுதிரி ஏற்றப்பட்டு ஆலயத்தினுள் சென்று மெழுகுதிரியினை ஆலயத்தினுள் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இவ் அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள், சிறுவர்கள், அருட்சகோதரி என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு தேவாலயத்தினுள் இருந்து நடைபயணமாக சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கிருந்து கடை வீதி வழியூடாக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை சென்றடைந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் 800 நாள்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது





