இலங்கை முழுவதும் மேதின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் அமைதியான முறையில் மேதின நிகழ்வுகள் இன்று (01.05) அனுஸ்டிக்கப்பட்டது.
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ந.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவிரவாதிகளின் தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கும் மற்றும் வவுனியாவில் கடமை நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நகரசபை தொழிலாளர் நால்வருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, பசுமைத் தொழிலாளர் நலன்புரிச் சங்கம், நகர சிறுவியாபாரிகள் சங்கம், உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தொழிலாளர் தொழில் சங்கம், மக்கள் திட்ட ஒன்றியம் வட மாகாணம், ஜனராஜா சுகாதார பொதுச்சேவை சங்கம், இடது குரல் அமைப்பு ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.





