
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உணவக உரிமையாளர் ஒருவர் சகல வசதிகளுடனும் பொலிஸ் நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
வவுனியா கனகராயன்குளம் பொலிஸாரால் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட அப்பகுதி உணவக உரிமையாளரான இவர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த உணவக உரிமையாளருக்கு ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படாத வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபருக்கு, ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொறுப்பதிகாரியின் அனுமதியின்றி இப்பொருட்கள் எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என பலர் கேள்வி எழுப்புவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.




