தாக்குதல் முயற்சி

வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர் வீடு புகுந்து குடும்ப பெண் ஒருவரை தாக்க முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று (04.06) வவுனியா திருநாவற்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

வட்டிக்கு பணம் கொடுத்த நபர் குறித்த பெண்ணின் கணவன் வீட்டில் இல்லாத சமயத்தில் பணம் கேட்க சென்று குறித்த குடும்ப பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி உடனடியாக பணத்தை செலுத்து என கூறி தாக்க முயற்சி செய்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வியாபாரம் நிமித்தம் கடன் பெற்றிருந்த நிலையில் வியாபாரம் நட்டமடைந்நததில் குறித்த பணத்தை செலுத்த தாமதமானதினால் பணம் கொடுத்த நபர் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் அவர்கள் மீது பொலிசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தயங்கி வருகின்றமை வட்டிக்காரர்களின் அட்டகாசம் அதிகரிக்க காரணமாக இருப்பதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறித்த முறைப்பாடு தொடர்பாக வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




