காதலித்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொன்று தலையையும் உடலையும் வெவ்வேறு இடங்களில் வீசிய காதலன் உட்பட இருவரை பொலிசார் கைது செய்தனர்.
திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள குளத்தில் நான்கு நாட்களுக்கு முன் தலையில்லாத பெண் உடல் நிர்வாண நிலையில் கிடந்தது. உடலை மீட்ட பொலிசார் பெண்ணின் தலையை தேடி வந்தனர் அனால் கிடைக்கவில்லை.
பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் பலாத்காரத்தின் பின் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
காணாமல் போனவர்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்கள் மூலம் அந்த பெண் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த சசிகலா 22 என தெரிய வந்துள்ளது.
சசிகலாவின் உறவினர்கள் திருச்சியில் உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு சசிகலா அடிக்கடி வரும்போது அப்பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சுரேஷ் 25, என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள சசிகலா வற்புறுத்தி உள்ளார். அதற்கு சுரேஷ் மறுத்துள்ளார்.
இந்நிலையில் சசிகலா கழுத்தறுத்தும் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் கொடுத்த தகவலில் காதலன் சுரேஷை பொலிசார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது சசிகலாவை அவரும் அவரது நண்பர் ரங்கநாதனும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
தலையை அறுத்து உய்யங்கொண்டான் ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்து உள்ளார். சுரேஷ் தெரிவித்த தகவலின்படி, உய்யங்கொண்டான் ஆற்றில் சசிகலாவின் தலையை பொலிசார் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில் கொலைக்கு உடந்தையாக இருந்த சுரேஷின் நண்பர் ரங்கநாதனும் கைது செய்யப்பட்டு உள்ளார்.





