வவுனியாவில் தொண்டர் சேவைகள் கலைக்கூடம் திறந்துவைப்பு!!(?)

900

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ‘தொண்டர் சேவைகள் கலைக்கூடம்’ திறப்பு விழா இன்று (27.06.2019) அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் ஜெ.கிருசாந் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் அதிகாரி வி.எ.சம்பத் கலந்துகொண்டு தொண்டர் சேவைகள் கலைக்கூடத்தை திறந்து வைத்தார்.

கிராமிய இளைஞர்களை மையப்படுத்தி பிரஜைகள் கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வவுனியா உட்பட ஆறு மாவட்டங்களில் தொண்டர் சேவைகள் கலைக்கூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு தேர்தல் தொடர்பான சட்டங்கள், தகவல் அறியும் சட்டம் பாவிக்கும் முறைமை, மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடங்கள் தொடர்பான பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதுடன் நவீன தொழில்நுட்பத்தினூடாக பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகள் தங்கள் கிராமங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தாமாகவே முன்னின்று தீர்வுகளை காண்பதற்கும், சமூகமட்ட பிரச்சனைகளை களைந்தெடுக்கவும் ஆற்றல் மிக்க ஒரு சமூதாயத்தை ‘தொண்டர் சேவைகள் கலைக்கூடம்’ ஊடாக உருவாக்குவதே நோக்கம் என அமைப்பின் இணைப்பாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட காணி இணக்க சபையின் தலைவர் இ.நவரட்ணம், வவுனியா பொலிஸ் உதவி ஆய்வாளர் பி.பி.குறுசிங்க, வவுனியா குற்றப்பிரிவு பொலிஸ் உதவி ஆய்வாளர் கலாவிமோதன், இணக்கசபை பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.