வவுனியா தரணிக்குளத்திற்கு 16 வருடங்களின் பின் பேரூந்து சேவை ஆரம்பம்!!

519

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட தரணிக்குளம் புதிய நகருக்கான பேரூந்து சேவை இன்று(01.07.2019) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2003ம் ஆண்டு தரணிக்குளம் புதிய நகரில் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அக் கிராமத்தில் 188 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில் அடிப்படைத் தேவைகளின் ஒன்றான போக்குவரத்து சேவையின்றி 16 வருடங்களான அக்கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியோர் வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கு விடுத்த கோரிக்கையினையடுத்து கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு தரணிக்குளம் புதிய நகருக்கான பேரூந்து சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் முன்னெடுத்திருந்தது.

இதன் அடிப்டையில் தினசரி மூன்று சேவைகளை தனியார் பேரூந்துகள் முன்னெடுக்கவுள்ளன. கிடாச்சூரி பகுதியிலிருந்து காலை 5.50, காலை 10.10, மாலை 4.45 மணிக்கு ஆரம்பமாகும் சேவைகள் தரணிக்குளம் புதிய நகருக்கு சென்று பயணிகளை ஏற்றுக்கொண்டு வவுனியா நோக்கி பயணிக்கும் எனவும் வவுனியாவிலிருந்து காலை 10.00 மணி , மதியம் 1.10, மாலை 5.25மணிக்கு ஆரம்பமாகும் சேவைகள் தரணிக்குளம் புதிய நகர் நோக்கி பயணிக்கும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் அக்கிராம மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

தரணிக்குளம் புதிய நகருடான பேரூந்து சேவையினை ஆரம்பித்து வைக்கும் இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிராம சேவையாளர் திவ்யப் பிரியா நாடாவெட்டி பேரூந்து சேவையினை ஆரம்பித்து வைத்ததுடன் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேரூந்தில் புதிய நகருக்கு பிரயாணம் மேற்கொண்டனர்.