சமாதானத்தை விரும்பாத கூட்டமைப்பினரை தெரிவுக்குழுவிற்கு அழைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. தெரிவுக்குழுவை நிராகரித்ததன் விளைவுகளை சம்பந்தன் விரைவில் உணர்ந்து கொள்வார் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று வவுனியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து அமைச்சரவையின் பேச்சாளரிடம் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..
நாட்டில் சமாதானம் நிலவவில்லை. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
உண்மையிலேயே தமிழ் மக்களின் உரிமைகளில் கூட்டமைப்பிற்கு அக்கறை இருக்குமானால் அரசாங்கத்துடன், தெரிவுக் குழு பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பார்கள். ஆனால் சமாதானத்தையோ நாட்டின் அமைதிச் சூழலையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.
அதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. காலத்தை வீணடித்து காத்திருப்பதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளே வீணடிக்கப்படுகின்றது.
மேலும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சரியான முடிவெடுக்கத் தெரியவில்லை. இரு மனதில் தீர்மானமெடுப்பதன் காரணத்தினாலேயே நாட்டில் குழப்பம் ஏற்படுகின்றது.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிருக்குமாயின் தெரிவுக் குழுவில் கலந்துகொண்டு நல்லதொரு தீர்மானத்திற்கு இணங்க முடியும்.
ஆனால் இன்னும் அரசாங்கத்தை நம்புவதா, இல்லையா, என்ற குழப்பத்தில் சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார்.
அதேபோல் தெரிவுக் குழுவை நிராகரிப்பதன் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல நல்ல விடயங்களை இழக்கின்றது.
இதனை வெகுவிரைவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளங்கிக் கொள்வார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையோ ஏனைய கட்சிகளையோ நம்பி அரசாங்கம் செயற்படவில்லை. அரசாங்கம் எப்போதும் மக்களை நம்பியே செயற்பட்டு வருகின்றது.
கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சர்வதேச ஒத்துழைப்புடன் நாட்டை குழப்பி அரசாங்கத்தினை கவிழ்க்க முடியாது.
இலங்கையின் உண்மை நிலையினை சர்வதேச நாடுகள் விளங்கிக் கொள்வதை விடவும் நாட்டு மக்கள் விளங்கிக் கொள்வதே முக்கியமானது. அதை மக்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர்.
யார் நாட்டிற்கு எதிராக செயற்பட்டாலும் எல்லாத் தடைகளையும் தகர்த்து ஆட்சியினை முன்னெடுத்து செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.





