வவுனியா வைத்தியசாலை..

நோயாளர் காவு வண்டியில் வவுனியா வைத்தியசாலைக்கு காயமடைந்த நிலையில் வந்த நபர் குழப்பம் விளைவித்தமையால் பதற்றநிலை ஏற்பட்டதுடன் பொலிசார் விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் நபரொருபர் காயங்களுடன் வீதியில் விழுந்து கிடப்பதாக 1990 அவரச சேவைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற நோயாளர் காவு வண்டி வீதியில் கிடந்த நபரை ஏற்றிக் கொண்டு வவுனியா வைத்தியசாலைக்கு வந்துள்ளது.

உடனடியாக குறித்த நபரை வைத்தியசாலை தள்ளுவண்டியில் வைத்து வைத்தியரிடம் கொண்டு செல்ல முற்பட்டபோது பெண் தாதிய உதவியாளர் ஒருவரை தா க்கியுள்ளார். இதனால் பாதிப்படைந்த தாதிய உதவியாளர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து விபத்துக்கள் பிரிவில் வைத்தியர் பரிசோதனை செய்ய முற்பட்ட போது குறித்த நபர் எழுந்து வைத்தியரை தாக்க முற்பட்டதுடன் மேசை, கதிரை, அலுமாரி, சுவர் என்பவற்றில் அடித்து அவற்றை சேதப்படுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற வைத்தியர்கள், தாதியர்கள் அவ்விடத்தில் இருந்து அச்சம் காரணமாக வெளியேறியுள்ளனர். தாதிய உதவியாளர்கள் குறித்த நபரை பிடித்து நிலமையை கட்டுப்படுத்த முயன்ற போது அவர்களையும் தாக்க முற்பட்டதுடன் கைகளில் இருந்து குருதி பாய்ந்து கொண்டிருந்த நிலையில் முரண்பட்டு குழப்பம் விளைவித்துள்ளார். இருப்பினும் தாதிய உதவியாளர்கள் பலர் இணைந்து குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் கடமையில் நின்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்த முடியாது 119 பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த மேலதிக பொலிசார், தாதியர்கள், தாதிய உதவியாளர்களுடன் இணைந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் வந்துள்ளனர்.

வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் விபத்துக்கள் பிரிவு என்பவற்றில் குறித்த நபர் குழப்பம் விளைவித்தமையால் சுமார் அரை மணிநேரம் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டதுடன், வெளிநோயாளர் பிரிவு மற்றும் விபத்துக்கள் பிரிவு முழுவதும் இரத்தக் கறையாக காட்சியளித்துள்ளது. இதேவேளை, இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா வைத்தியசாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




