இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : ஆபத்து குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை!!

325

சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் (குறிப்பாக பிற்பகலிலும் இரவிலும்) காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது உயர் அலைகளுடனும் காணப்படும்.

வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். 2019 ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என்பது மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.