கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான விமானத்தின் முன் கண்ணாடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவானது.
இதன் மூலம் விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான யூ.எல்.503 என்ற விமானம் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் லண்டன் நோக்கி பயணிப்பதாக இருந்தது.
எனினும் ஒரு மணி நேர தாமதத்தின் பின்னர் குறித்த விமானம் 3.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
பயணத்தை ஆரம்பித்து அரை மணி நேரத்துக்குள் அந்த விமானம் கட்டுப்பாட்டறையுடன் தொடர்பு கொண்டு மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் முன் கண்ணாடியில் ஏற்பட்ட வெடிப்பே இதற்கு காரணமாகும். இந்தவெடிப்பையடுத்து விமானத்திற்குள் அமுக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அனைத்து பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து பயணிகளை ஒக்ஸிசன் வாயுக் கருவிகளை பொருத்திக் கொள்ளுமாறு விமானக் கப்டன் அறிவித்துள்ளார்.
இதனால் அதில் பணித்த 250 பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.
விமானம் அவசரமாக தரையிறக்கபட்டமையினால் பாரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன் விமானத்திலிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
சம்பவத்தை அடுத்து தரையிறக்கப்பட்ட விமானம் நேற்று இரவு வரை தனது லண்டன் நோக்கிய பயணத்தை தொடரவில்லை.
இந் நிலையில் லண்டன் நோக்கி பயணிக்க தயாரான பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த விமானத்தில் பணித்த பயணிகள் நேற்றிரவு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.