திடீர் பரிசோதனை

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன், இந்த கண்காணிப்பு விஜயமானது உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன், அதிகமான உணவகங்களில் நீண்டநேரம் சூடான நிலையில் வைத்திருப்பதற்காக றெஜிபோம் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது 06 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 05 உணவகங்களில் பரிமாறுவதற்கு தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மருந்தகங்களுக்கான பரிசோதனையின் போது பெரும்பாலான பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் அற்ற நிலையில் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், மருந்தாளர்கள் இல்லாதிருந்தமையும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





