சப்ராஷ் அஹமட், மிஸ்பா உல்ஹக் மற்றும் யூனிஸ்கானின் நிதானமான துடுப்பாட்டத்தால் இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் இரண்டாது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி சற்று வலுவான நிலையை அடைந்துள்ளது.
கடந்த 8ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 165 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதனையடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சார்பில், மஹெல ஜெயவர்த்தன 129 ஓட்டங்களையும், குஷல் சில்வா 95 ஓட்டங்களையும் விளாசினர். மூன்றாம் நாளில் 388 ஓட்டங்களை குவித்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை.
இதன்படி 223 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்க நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானின் ஆரம்ப வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அந்த அணி தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.
எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த யூனிஸ்கான் மற்றும் மிஸ்பா உல்ஹக் ஆகியோர் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 132 ஓட்டங்களை பெற்ற நிலையில், 7 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 91 ஓட்டங்களால் பாகிஸ்தான் பின்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி சார்பில் யூனிஸ்கான் 77 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிஸ்பா உல்ஹக் 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதன்படி நான்காம் ஆட்ட நேர முடிவில 330 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. சப்ராஷ் அஹமட் 70 ஓட்டங்களுடனும் சயீத் அஜ்மல் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதன்படி 3 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க, 107 ஓட்டங்களால் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்க இன்று ஐந்தாவதும் இறுதியுமான நாள் இடம்பெறவுள்ளது.





