
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் சபையின் சார்பில் வருடந்தோறும் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு இம்முறை கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் மும்பையில் நடந்த விழாவில் இவருக்கு விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கிண்ணத்தை வென்று தந்த கபில் தேவ், 131 டெஸ்ட்(5248 ஓட்டங்கள், 434 விக்கெட்), 225 ஒருநாள் (3783 ஓட்டங்கள், 253 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.
பாலி உம்ரிகர் விருது
கடந்த சீசனில்(2012-–13) சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை அஷ்வின் பெற்றார். இவர் இந்த காலக்கட்டத்தில் 8 டெஸ்டில் 43 விக்கெட் வீழ்த்தினார்,18 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றினார். இவருக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
திலிப் சர்தேசாய் விருது
சமீபத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா, இந்தியாவின் சிறந்த வீரருக்கான(2013-–14) திலிப் சர்தேசாய் விருது பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் சச்சின், லட்சுமண், கங்குலி, டோனி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவின் போது தாங்கள் வென்ற உலக கிண்ணத்துடன் வந்து கபில்தேவ், டோனி அசத்தினர். பின்னர் இருவரும் தங்களது கிண்ணத்தை மாற்றிக் கொள்ள, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர்.





