தை மாத ராசி பலன்கள் – ரிஷபம்!!

395

rishabam

நெற்றியில் சுருக்கம் விழுந்தாலும் இதயத்தை இளமையாக வைத்திருப்பவர்களே, தொடங்கிய வேலையை முடிக்கும் வரை தூங்காத வர்களே, பணப்பற்றை விட, நாட்டுப் பற்று, மொழிப் பற்று அதிகமுள்ளவர்களே, ராஜ கிரகங்களான குருவும், சனியும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு கூடும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

செவ்வாய் உங்கள் ராசிக்கு 5ல் நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் வக்ரமடைந்து 8ல் மறைந்திருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும். உடல் அசதி, சோர்வு, காய்ச்சல், சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல் வரக்கூடும்.

ஆனால், சுக்கிரன் 2ம் வீட்டை பார்த்துக் கொண்டிருப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உங்களின் சுகாதிபதியான சூரியன் 9ம் வீட்டில் நிற்பதால் தந்தையாருக்கு உடல் நலக் குறைவு ஏற்படும். ஆனால், புதனும் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். கேது 12ல் மறைந்திருப்பதால் அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள்.

அரசியல் வாதிகள் தலைமையுடன் இருந்த மோதல் நீங்கும். தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொகுதி மக்களின் விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். மாணவர்கள் மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னிப் பெண்கள் காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப தொழிலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உணவு, ஏற்றுமதி-இறக்குமதி, வாகனம், கட்டிட வகைகளால் லாபமடைவீர்கள். வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள் மூலமாக புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வேலையாட்கள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் ம த்தியில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். உயரதிகாரி உங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். விரும்பியபடி இடமாற்றம் கிடைக்கும். கூடுதல் சலுகைகளும் பெறுவீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். கலைத்துறையினர் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சம்பள நிலுவைகள் கைக்கு வரும். மூத்த கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். விவசாயிகள் மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை, எலித் தொல்லை நீங்கும். தடைகள் அகன்று வளர்ச்சிப் பாதையில் செல்லும் மாதமிது.

ராசியான திகதிகள்:
ஜனவரி 16, 17, 18, 20, 23, 24, 26
பெப்ரவரி 2, 3, 4, 5, 12

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 28, 29 ஆகிய திகதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம் : சந்திரசேகரசுவாமியை தரிசித்து வாருங்கள். உழவாரப் பணியில் ஈடுபடுங்கள்.