தை மாத ராசி பலன்கள் – மிதுனம்!!

425

mithunam

நெருக்கடி நேரத்திலும் தன்னம்பிக்கை தளராதவர்களே, மாறுபட்ட சமூதாயப் பார்வை உள்ள வர்களே, சுற்றியிருப்பவர்கள் சுகப்பட தன் தேவைகளை சுருக்கிக் கொள்பவர்களே உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன் வக்ரமாக இருந்தாலும் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பிரச்னைகளையும், சிக்கல்களையும் தீர்ப்பதற்கான மனோபலம் கிடைக்கும். கேது லாப வீட்டில் தொடர்வதால் பங்குகள் மூலமாக பணம் வரும்.

கடைசி நிமிடத்தில் பணத்தேவை பூர்த்தியாகும். உங்கள் ராசிக்குள் குரு அமர்ந்து ஜென்ம குரு தொடர்வதாலும் வக்ரமடைந்திருப்பதாலும் தூக்கம் குறையும். சுக ஸ்தானமான 4ம் வீட்டில் 6ம் வீட்டாதிபதி செவ்வாய் நிற்பதால் அடிவயிற்றில் வலி, உஷ்ணக் கட்டி வந்து நீங்கும். பூர்வ புண்ய ஸ்தானமான 5ல் சனியும், ராகுவும் நிற்பதால் புதிய முயற்சிகள், முதலீடுகளெல்லாம் செய்வதற்கு முன்பாக யோசிப்பது நல்லது. திடீர் முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். உங்களுடைய ராசிக்கு 8ல் சூரியனும், புதனும் மறைந்து நிற்பதால் வி.ஐ.பிகளின் ஆதரவால் சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.

அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். வழக்குகளை சந்திக்க வேண்டி வரும். சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தொகுதி மக்களை மறக்காதீர்கள். மாணவர்கள் ஒருமுறை படித்தால் மட்டும் போதாது. அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. வேதியியல் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கன்னிப் பெண்கள் நண்பர்கள் விவகாரத்தில் கவனமாக இருங்கள். நண்பர்களிடம் உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கல்யாணம் தள்ளிப் போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் பழைய கடன்களை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்களுக்கு அதிகமாக முன்பணம் தர வேண்டாம். விலை உயர்ந்த ஆபரணங்கள், நிதிசார் தொழிலில் இருப்பவர்கள் சின்னச் சின்ன நஷ்டங்களை சந்திக்க வேண்டி வரும். பங்குதாரர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்த கடன் உதவி கிடைக்கும்.

உத்யோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். வளைந்து கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. வெகுளித்தனமாகப் பேசி விமர்சனத்திற்கு உள்ளாகாதீர்கள். கலைத்துறையினர் இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுவீர்கள். விவசாயிகள் எலித் தொல்லையால் மகசூல் குறையும். தவறான உரங்களைப் பயன்படுத்தாதீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.

ராசியான திகதிகள்:
ஜனவரி : 17, 18, 19, 20, 26, 27, 28
பெப்ரவரி : 4, 5, 6, 7

சந்திராஷ்டம தினங்கள் : ஜனவரி 30, 31 ஆகிய திகதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் : நரசிம்மரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.