தை மாத ராசி பலன்கள் – மீனம்!!

435

meenam

மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே, பாகுபாடு பார்க்காமல் பலரிடமும் பாசமழை பொழிபவர்களே, தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளா தவர்களே, மூடநம்பிக்கைகளில் மூழ்காமல் அறிவுப் பூர்வமாக சிந்திப்பவர்களே உங்களுடைய ராசிநாதன் குரு 4ம் வீட்டிலேயே தொடர்வதால் ஓயாமல் உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். திடீர் திடீரென்று கோபப்படுவீர்கள்.

சூரியனும், புதனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சுக்கிரன் வக்ரமாகி 10ம் வீட்டில் நிற்பதாலும், அஷ்டமத்துச் சனி நடைபெறுவதாலும் உங்களைப் பற்றிய அவதூறுச் செய்திகள் அதிகமாகும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியங்களிலும் ஈடுபட வேண்டாம். நெருங்கிய உறவினர்களை தவிர மற்றவர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செவ்வாய் 7ம் வீட்டில் நிற்பதால் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும்.

வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். அஷ்டமத்துச் சனி நடப்பதுடன், அஷ்டமத்திலே ராகுவும் நிற்பதால் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். நேரம் கிடைக்கும்போது வீட்டு வேலைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். எதிர்க்கட்சியினர் வியக்கும்படி புதிய திட்டங்கள், புது வியூகங்கள் அமைத்து கட்சியை பலப்படுத்துவீர்கள்.

மாணவர்கள் அலட்சியமாக இருக்காதீர்கள். நல்லவர்களுடன் பழகுங்கள். கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். கன்னிப் பெண்கள் புது வேலை கிடைக்கும். எதிர்ப்புகளும் நீங்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். 10ல் சுக்கிரன் நிற்பதால் உத்யோகத்தில் கூடுதலாக வேலைபார்க்க வேண்டி வரும்.

அதிக நேரம் ஒதுக்கி உழைத்தும் மேலதிகாரிகளிடமிருந்து எந்தவித ஆதரவான வார்த்தையும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அவர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும்.

கலைத்துறையினர் உங்களின் கலைத்திறன் வளரும். பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். விவசாயிகள் விளைச்சல் அதிகரிப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். விடாப் பிடியாக முயற்சித்து விட்டதைப் பிடிக்கும் மாதமிது.

ராசியான திகதிகள்:
ஜனவரி : 15, 19, 20, 21, 22, 28, 29, 30, 31
பெப்ரவரி : 5, 6, 9, 12.

சந்திராஷ்டம தினங்கள் : ஜனவரி 23ம் திகதி நண்பகல் 12 மணி முதல் 24 மற்றும் 25ம் திகதி மாலை 5 மணி வரை வேலைச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம் : அம்பாளை தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.