விவேகானந்தரை தமிழகம் தான் உலக உச்சிக்கு கொண்டு சென்றது : நடிகர் விவேக்!!

441

Vivek

பெரியநாயக்கன் பாளையத்தில் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரை நிறைவு விழாவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வித்யாலயா செயலர் சுவாமி அபிராமனந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது..

விவேகானந்தர் துறவிகளில் மட்டுமல்ல, மனிதர்களுள் சிறந்தவரும் அவரே. பெண்மைக்கு முக்கியத்துவம் அளித்த முதல் புரட்சி சிந்தனையாளர். கல்வி, வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றால் இந்தியா உயர முடியும் என்று தீர்க்கமாய் நம்பியவர். 100 யானைகள் பலத்தையொத்த வலிமையும், சிங்க கர்ஜனை போன்ற வீரத்தையும் உடையவர்.

உண்மை, தன்னம்பிக்கை, ஆண்மையின் உருவமாக இவரை உலகம் பார்த்தது. எப்போதும் இளைஞராக உருவகிக்கப்படும் இவர் இளைஞர்களின் மனதில் நம்பிக்கை விதையை விதைத்தவர். தன்னுடைய வீர உரைகளால் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பல தலைவர்களை உருவாக்கியவர்.

பொதுவாக துறவிகள் என்றாலே சாந்தமாக, அமைதியாக பேசுவார்கள் தான் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் துடிப்பும், கத்தி போன்ற கூர்மையுடைய கருத்துக்களையும், வீரம் ததும்பும் வடிவையும் உடையவராக விளங்கினார் சுவாமி விவேகானந்தர்.

குறிப்பாக அனைத்து மதங்களையும் மதிக்கும் மனப்பான்மையை நம் மனத்தில் விதைத்த முதல் சம தர்மவாதி. இந்தியாவில் முதன்முதலாக தகுந்த ஊக்கத்தை வழங்கிய இந்திய அறிவியல் நிறுவனத்தினை ஆரம்பிக்க அடித்தளமிட்டவர் சுவாமி விவேகானந்தர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இந்த நிறுவனத்தில் இருந்து தான் நம்மால் ஒரு அப்துல் கலாமை பெற முடிந்தது. தமிழகத்தில் பிறந்ததினாலோ என்னவோ தேசிய கவியான பாரதிக்கு இது வரை முறையான தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் வங்காளத்தில் பிறந்த சுவாமி விவேகானந்தரை தமிழகம்தான் உச்சிக்கு கொண்டு சென்றது.

தமிழகத்துக்கு வரும் வரை இவரை கண்டு கொள்ளவில்லை. பாரதி சுதந்திரம் அடைவதற்கு முன்பே அதனை அடைந்து விட்டோம் என்று பள்ளு பாடினார். விவேகானந்தரும் இந்தியாவுக்கு 50 ஆண்டுகளில் சுதந்திரம் கிடைக்கும் என்றார். அது போலவே கிடைத்தது.

இருவருமே நாட்டின் அடித்தட்டு ஏழைகளைப் பற்றி சிந்தித்தனர். பெண்கள் உயர்விற்காக ஏங்கினர். ஏழைகளின் பட்டினியைப் போக்காத மதமோ, கடவுளோ நமக்கு தேவையில்லை என்றார்கள். இருவருமே ஒத்த கருத்துடைய புரட்சி சிந்தனையாளர்ளாக பரிணமித்தார்கள். அதனால் தான் விவேகானந்தர், காந்திஜி, ராஜாஜி பேன்ற தலைவர்களுக்கு வழிகாட்டியாக அமைய முடிந்தது.

இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விவேகானந்தர் ரதம் சென்றது. லட்சக்கணக்கான கிராம மக்கள் சாதி, மதம் பாராமல் வரவேற்பளித்ததே இந்தியாவின் உண்மையான தலைவராக இன்றும் விவேகானந்தரே இருக்கிறார் என்பதற்கு சான்றாக அமைந்தது என்றார்.

தொடர்ந்து அவர் விவேகானந்தரின் நிறைவு விழா ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது பெரிய நாயக்கன் பாளையத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் கோவை மாவட்ட எஸ்.பி.சுதாகர், ராமகிருஷ்ண மிஷன் துறவிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.