யாழ் ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை, 12 பேர் விளக்கமறியலில்!!

540

Jailயாழில் கைதான ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் நடைபெற்ற வாள் வெட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, ஆவா எனும் குழுவைச் சேர்ந்த 13 பேரை கடந்த 6 ம் திகதி கோப்பாய் பொலிசார் கைது செய்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் நேற்று நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டன. விசாரணைகளின் போது ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது. ஏனைய 12 பேரையும் எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஆவா குழுவை சார்ந்த ஏனையவர்களையும் பொலிசார் தொடர்ந்தும் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற பெண் ஒருவர் உள்ளிட்ட ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விசாரணைகள் முடிந்த பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்ற ஆவா குழுவை சார்ந்தவர்களின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 30க்கும் அதிகமானவர்களே ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ் வழக்கு தொடர்பான செய்திகளோ படங்களோ ஊடகங்களில் வெளியாக கூடாது என்றே அவர்கள் மிரட்டியுள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியை கண்டதும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டனர்.

இவ் மிரட்டல் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.