வவுனியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற குத்துச்சண்டை வீரர்கள் காயம்!!

718

குத்துச்சண்டை வீரர்கள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட இரு இலங்கை வீரர்கள் போட்டியின் போது காயமடைந்துள்ளனர்.

இலங்கையை பிரதிபலித்து வட மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ரி.நாகராஜா (வயது 18), எஸ்.சிறிதர்சன் (வயது 18) ஆகியோரே இவ்வாறு குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட நிலையில் காயமடைந்துள்ளனர்.

வட மாகாணத்தை பிரதிபலித்து வவுனியாவிலிருந்து ஏழு வீரர்கள் தேசிய கிக் பொக்சிங் குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பாகிஸ்தானில் கடந்த 23.01.2020 தொடக்கம் 27.01.2020 வரை நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்த நிலையிலேயே, போட்டியின் போது குறிப்பிட்ட இரண்டு வீரர்களும் கை மற்றும் முகத்தில் கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் இந்த நிலையிலேயே குறித்த இரு வீரர்களும் தொடர்ந்தும் விளையாடி இலங்கைக்கு வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர். காயமடைந்த இரண்டு வீரர்களும் சிகிச்சைகளின் பின் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

வட மாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் பயிற்சிகளை பெற்று தேசிய ரீதியில் தங்க பதக்கங்களை பெற்ற ஏழு வீரர்கள் குறித்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை பிரன்ஞ்சு சவாட் கிக்பொக்சிங் குத்துச்சண்டை அமைப்பின் தலைவர் சி.பூ.விக்ரமசிங்க தலைமையில் பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் 11 தங்க பதக்கங்களையும், 8 வெள்ளி பதக்கங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வீரர்கள் பாகிஸ்தானில் 7 பதக்கங்களைப் பெற்று சாதனை!!

இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23.01.2020 தொடக்கம் 26.01.2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில்,

கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான,

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (18) தங்கப்பதக்கத்தையும், பி.ராகுல் (17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (18) வெள்ளிப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (11) தங்கப்பதக்கத்தையும்,

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ.நிரோஜன் (16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் (17) வெள்ளிப் பதக்கத்தையும்,  வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.சிறிதர்சன் (18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும், பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும், தென்னிலங்கையை சேர்ந்த பதின்நான்கு வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர்.

இவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப்பதக்கங்களையும் 08 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக் இப்திகார் உள்ளிட்ட குழுவினரின் தலைமையில் பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வெற்றி வாகை சூடிய எமது வீரர்கள் நாளை 27.01.2020 மாலை 04.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.