12 கிராமங்கள் முற்றாக முடக்கம்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அவ்வவ்போது அடையாளம் காணப்படுவதால் அவ்வப்போது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது பொலன்னறுவையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து பொலன்னறுவை லங்காபுர பகுதியிலுள்ள 12 கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியேறவோ, இப்பகுதிக்குள் யாரும் உட்புகவோ முடியாமல் பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பொலனறுவை பகுதியில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர் வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய சிப்பாய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படை முகாமில் மின்சார தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றும் 32 வயதான சிப்பாய் ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டனன் கமான்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

குறித்த சிப்பாய் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி தான் கடமையாற்றிய முகாமிலிருந்து விடுமுறைக்காக பொலன்னறுவை – புலஸ்திகம பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அவருக்கு சுனயீனம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஏப்ரல் 20ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறித்த சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்றைய தினம் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், குறித்த சிப்பாய் கடமையாற்றிய வெலிசர முகாமிற்குள் தற்போது விசேட சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறித்த சிப்பாய் நெருங்கி பழகியவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும், அதற்கு சுகாதார பிரிவினர் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த சிப்பாய்க்கு எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பிலும் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்ரினன்ட் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

இதுவரையில் இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 323 எனவும் உயிரிழப்புக்கள் 7 என்பதோடு குணமடைந்தவர்கள் 105 என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.




