மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் பலி!!

564

மிதுன்சங்கர்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் நேற்று(13.05.2020) இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதியதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பின்புறமாக இருந்த ஊடகவியலாளர் உழவு இயந்திரத்தின் சில்லுகளுக்குள் அகப்பட்டு ஸ்தலத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

வெளிநாட்டு தமிழ் ஊடகம் ஒன்றில் கடமையாற்றிவரும் திருகோணமலை உட்துறைமுக வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும்
இரகுநாதன் மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த, ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கோட்டைக்கல்லாறு பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்திய நிலையில் விலாசம் கேட்டுக்கொண்டிருக்கும்போது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மீது மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்பக்கமாக இருந்தவர் உழவு இயந்திரத்தின் சில்லுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். இதன்போது உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.