இந்தியாவின் வருகைக்கு பின் விசா வழங்கும் பட்டியலில் இடம்பெறாமை குறித்து இலங்கை தமது கவலையை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் இந்தியாவிடம் விளக்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கோரவுள்ளதாக வெளியுறவு அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டமைக்கான காரணத்தை இந்திய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இலங்கையுடன் பாகிஸ்தான், சூடான், ஆப்கானிஸ்தான், ஈராக் ,ஈரான் போன்ற நாடுகளுக்கும் இந்தியாவின் வருகைக்கு பின்னர் விசா வசதி பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை.
பாதுகாப்பு காரணங்களை மையமாகக் கொண்டே இந்த வருகைக்கு பின் விசா வசதி பட்டியலில் இருந்து சில நாடுகள் நீக்கப்பட்டதாக இந்திய அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை குறித்த பாதுகாப்பு அச்சம் குறித்து அந்த தரப்பு உரிய தகவல்களை தரவில்லை.
இதேவேளை இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கைக்கு வந்தபின்னர் இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா வசதிகளை நீக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.





