கிளிநொச்சி – பளை ரயில் சேவை மார்ச் 04ல் உத்தியோகபூர்வ பயணம் : ஏப்ரலில் யாழ் வரை செல்லும்!!

630

Train23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை எதிர்வரும் 4 ம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

இந்திய இர்கொன் நிறுவனத்தினால் வட பகுதிக்கான ரயில் பாதை துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 21 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு பரந்தன், ஆனையிறவு ரயில் நிலையங்களும் மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இந்திய உயர் ஸ்தானிகர் சிங்ஹா ஆகியோர் ரயில் சேவையை ஆரம்பித்து வைக்க உள்ளனர்.

பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதையும் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக வடபகுதி ரயில் பாதை நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான பொறியியலாளர் லியோ பெர்ணாந்து தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை பயணிக்க உள்ளதோடு யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையான நிர்மாணப் பணிகள் ஜூனில் பூர்த்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான ரயில் சேவை கடந்த வருடம் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டது.

வட பகுதிக்கான ரயில் பாதை முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் தெற்கிலிருந்து மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ரயில்வே திணைக்களம் கூறியது.