வளப் பற்றாக்குறையுடன் இயங்கிவரும் ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் பாடசாலை வரலாற்று சாதனை!!

1715

ஒட்டுசுட்டான் சின்னத்தம்பி வித்தியாலயம்..

இவ்வருட புலமை பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் வித்தியாலயம். துணுக்காய் கல்வி வலயத்தின் ஒட்டுசுட்டான் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையாக இப் பாடசாலை அமைந்துள்ளது.

18.10.1956 ல் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் அருகாமையில் இவ்வித்தியாலயம் உருவாகியுள்ளது. பிரதேசத்தின் ஆதிப்பாடசாலையாகிய இதன் புராதன பெயர் சின்னத்தம்பி வித்தியாலயமாகும்.

தரம் ஐந்திற்கு உட்பட்ட மாணவர்களைக்கொண்டு , ஐந்து பெண் ஆசிரியைகளுடன் அதிபருமாக தற்போது இப்பாடசாலை இயங்கிவருகிறது.

பாடசாலையின் சாதனையாக.. கடந்தவருடம் நான்கு பிள்ளைகள், தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றிருந்தனர்.

ஆனால்.. இவ்வருடம் அதனை முறியடித்து, ஐந்து பிள்ளைகள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றிருக்கிறார்கள். இதுவே ஒட்டுசுட்டான் கோட்டப்பாடசாலைகளோடு ஒப்பிடும் போது முதன்நிலை வகிக்கிறது.

வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களையே அதிகமதிகமாக இப்பாடசாலை உள்வாங்கியிருக்கிறது. இருப்பினும் ஒருசிலரைத் தவிர தன்னார்வலர்களின் உதவிகள் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. பாடசாலையின் சித்தி வீதமும் 100% ஆகும்.

எதிர்வரும் காலங்களில், துணுக்காய் கல்வி வலயத்திலேயே அதிக மாணவர்களை வெட்டுப்புள்ளிக்குமேல் பெறச்செய்வதே தமது இலக்கு என்றும், அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் உட்பட

வலயக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர், ஒட்டுசுட்டான் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் தொடர்ச்சியாகவே தந்துதவுவதாக வித்தியாலய அதிபர் திருமதி வே.நித்தியகலா அவர்கள் தெரிவித்தார்.