பி.சீ.ஆர்..
வவுனியா மாவட்டத்தில் புதிது புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமையுடன் 50க்கு மேற்பட்ட நபர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா வர்த்தக சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கமைய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரினால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு இன்றையதினம் (23.12.2020) காலை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக வவுனியா நகரம், ஹோரவப்பொத்தானை வீதி, சந்தை ஆகிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் என சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட்ட 150 நபர்களுக்கே இவ்வாறு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனையை உறுதிப்படுத்தும் அட்டையும் வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் வழங்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.