வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடு!!

2011

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட இடங்களில் தொற்று நீக்கும் செயற்பாட்டில் வவுனியா பொலிஸார் இன்று (09.01.2020) காலை ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது.

இந்நிலையில் பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் கடந்த புதன்கிழமை (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த 54 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் பணியாற்றிய மற்றும் நடமாடிய பகுதிகளான பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன வவுனியா பொலிஸாரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா நகரில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் உயரிய பணியில் வவுனியா சுகாதார திணைக்களம், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், வவுனியா வர்த்தக சங்கத்தினர் ஆகியோரின் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.